Friday 30 September 2011

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தஞ்சையில் இன்று மாபெரும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம்


தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும், தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்ட சேதுபாவா சத்திரம் காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்யக்கோரியும், கைது செய்யப்பட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சேதுபாவா சத்திரத்தில் இன்று (30-09-2011 ) நடைபெற்ற காவல் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதில் மாநில மேலன்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார் .
தாக்கப்பட்ட பள்ளிவாசல்:

வக்ஃபு நிலத்தில் இந்து முன்னணி கொடி, களத்தில் இறங்கி அபகரிப்பை தடுத்த ஊட்டி காந்தல் கிளை!


கடந்த 22-9-2011 அன்று உதகை படகு இல்லம் செல்லும் வழியல் சாலையோரம் வக்ஃபுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் இந்து முன்னனியினர் தங்களது கொடியை வைத்து வக்ஃபுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றனர்.
இதை பார்த்த ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் உடனே அருகில் உள்ள G1 காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார் புகார் செய்தனர். காவல் துறை ஆய்வாளர் ”அது வக்ஃபு நிலம் தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?” என்று கேட்டு வழக்கு ஏதும் பதிவு செய்யவி்ல்லை.
உடனே ஊட்டி காந்தல் கிளை நிர்வாகிகள் வக்ஃபு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ”அது வக்ஃபு நிலம் தான்” என்பதற்கான அதாரத்தை திரட்டி மறுநாள் அதாரத்துடன் காவல் நிலையத்திற்கு வந்தனர்.
ஆதாரத்தை பார்த்த காவல்துறையினர் உங்கள் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வக்ஃபு நிலத்தில் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினரின் கொடியை அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday 28 September 2011

இந்த வார கேள்வி

இந்த வார கேள்வி :மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளைவிட எத்தனை மடங்கு சிறந்தது ?(குறிப்பு : உங்களுடைய பதில்கள் இந்த வார இறுதியிலேயே வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்)


அனுப்ப வேண்டிய முகவரி :tvmtntj@gmail.com

தஹஜ்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்கள் ?



கேள்வி :அஸ்ஸலாமு அலைக்கும் ,தஹஜ்ஜத் தொழுகை 4 ரக்அதா?8 ரக்அதா ?எவ்வளவு தோழா வேண்டும்?
- Sharfudeen,abudhabi

பதில் : இந்தக் கேள்வி தொடர்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார் அந்தக் கட்டுரையையே நாமும் இங்கு பதிலாகத் தருகிறோம்.

4+5=9 ரக்அத்கள்
எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் எழுந்து சிறுவன் தூங்கி விட்டானா? என்று கூறி (தொழுகைக்காக) நின்றார்கள். நானும் எழுந்து அவர்களின் இடது புறம் நின்றேன். என்னைத் தமது வலது புறத்திற்கு மாற்றினார்கள். அப்போது ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்கும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் (பஜ்ரு) தொழுகைக்காகப் புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 117, 697
இஷாவுக்குப் பின் நான்கு ரக்அத்களும் தூங்கி எழுந்த பின் ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் ஆக மொத்தம் 11 ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.

இதில் கடைசியாகக் குறிப்பிடப்படும் இரண்டு ரக்அத், இரவுத் தொழுகை கணக்கில் அடங்காது என்பதை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம்.
இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரு தொழுகையை ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 472, 998
வித்ரு தொழுகை என்பது ஒற்றைப் படையாகத் தொழும் தொழுகையாகும். மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அது வித்ரு தொழுகை தவிர வேறில்லை. வித்ரு தான் கடைசித் தொழுகை என்றால் அதன் பிறகு தொழுத இரண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகையாக இருக்காது. மாறாக ஃபஜ்ரு தொழுகையின் முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும். இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தூங்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ரு தொழுகைக்குத் தான் புறப்பட்டார்கள் என்று மேற்கண்ட ஹதீஸிலேயே கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத்தை விட்டதேயில்லை என்று ஹதீஸ் உள்ளதால் இந்த இரண்டு ரக்அத் பஜ்ருடைய முன் சுன்னத்தாகத் தான் இருக்க முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத் தொழுவதை அறவே விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1159, 1182, 1163
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஜ்ருடைய முன் சுன்னத் தொழுது விட்டுச் சற்று நேரம் தூங்குவார்கள். அதன் பின்னர் பஜ்ரு தொழ வைக்கச் செல்வார்கள் என்று பல்வேறு ஹதீஸ்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பஜ்ரு நேரம் தெளிவாகி பாங்கு சொல்பவர் பஜ்ருடைய பாங்கு சொன்னவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து பஜ்ருக்கு முன் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இகாமத் சொல்வதற்காக பாங்கு சொல்பவர் வரும் வரை வலது பக்கம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: புகாரி 626, 994, 1123, 1160, 6310
எனவே மேற்கண்ட ஹதீஸில் கூறப்படும் இரண்டு ரக்அத்கள் பஜ்ரின் முன் சுன்னத் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையாக நான்கு ரக்அத்களும் ஐந்து ரக்அத்களும் தொழுதுள்ளனர் என்பது தெளிவாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று புகாரி 937, 1169 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு ரக்அத்களை வீட்டில் தான் தொழுவார்கள் என்று புகாரி 1173, 1181 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். அதாவது இஷாவின் பின் சுன்னத்தை அவர்கள் தொழாமல் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள் என்பது தெரிகிறது.

எனவே மேற்கண்ட நபிவழியை நடைமுறைப்படுத்த விரும்புவோர் இஷாவின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழாமல் அதற்குப் பதிலாக நான்கு ரக்அத் மட்டும் தொழுது விட்டு, தூங்கி எழுந்து ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் போதும். இவ்வாறு செய்பவர் தஹஜ்ஜுத் எனும் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவராவார். இதுவும் நபி வழி தான்.

ஏழு அல்லது ஒன்பது ரக்அத்கள்.
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடமையல்லாத தொழுகைகள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் என் வீட்டில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் புறப்பட்டு லுஹர் தொழுகை நடத்துவார்கள். பின்னர் வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மக்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தி விட்டு வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
மக்களுக்கு இஷாத் தொழுகை நடத்திவிட்டு எனது வீட்டிற்கு வந்து இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் வித்ரை சேர்த்து ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். இரவில் நீண்ட நேரம் உட்கார்ந்தும் தொழுவார்கள். அவர்கள் நின்று தொழும் போது நின்ற நிலையில் இருந்தே ருகூவுக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள். உட்கார்ந்து தொழுதால் உட்கார்ந்த நிலையிலிருந்தே ருகூவு, ஸஜ்தா செய்வார்கள். பஜ்ரு நேரம் வந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக் , நூல் முஸ்லிம் 1201
வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரு எத்தனை? வித்ரு அல்லாத தொழுகை எத்தனை என்று பிரித்துக் கூறப்படவில்லை.

8+1 அல்லது 6+3 அல்லது 4+5 என்று தொழுதிருக்கலாம். அது போல ஏழு ரக்அத்கள் தொழும் போது 6+1 அல்லது 4+3 என்றும் தொழுதிருக்கலாம். வித்ரையும் சேர்த்து ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கை வரும் வகையில் தொழுதால் அவர் நபிவழியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றியவர் தான்.

8+3 ரக்அத்கள்.
'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) , நூல்: புகாரீ 1147, 2013, 3569
வித்ரு தவிர எட்டு ரக்அத்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிவழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

வித்ரையும் சேர்த்து 11 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். இதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 994, 4569, 1123, 1140, 6310
10 ரக்அத்கள் மட்டும் தொழுதல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் எட்டு ரக்அத்களும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்களும் தொழுதார்கள். (பஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இத்தொழுகையை அவர்கள் ஒரு போதும் விட்டதில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ,நூல்: புகாரி 1159
இரவுத் தொழுகை பற்றிய அறிவிப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வித்ரு தொழாமல் இருந்ததாகக் கூறப்படவில்லை. ஆனால் இந்த அறிவிப்பில் ஒற்றைப்படையாக அவர்கள் எந்தத் தொழுகையும் தொழுததாகக் கூறப்படவில்லை. சில சமயங்களில் இப்படி ஒருவர் தொழுதாலும் அவர் நபிவழியில் தொழுதவராவார்.

12 ரக்அத்துடன் வித்ரும் தொழுதல்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு இரவு தங்கினேன்...
....நபிகள் நாயகம் (ஸல்) அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். அவர்கள் செய்தது போல் நானும் செய்து அவர்களின் விலாப் புறத்தில் நின்றேன். அவர்கள் தமது வலது கையை என் தலையில் வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பினார்கள். (1) இரண்டு ரக்அத்கள் (2) பின்னர் இரண்டு ரக்அத்கள் (3) பின்னர் இரண்டு ரக்அத்கள் (4) பின்னர் இரண்டு ரக்அத்கள் (5) பின்னர் இரண்டு ரக்அத்கள் (6) பின்னர் இரண்டு ரக்அத்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள்....
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) , நூல்: புகாரி 183, 992, 1198, 4571, 4572
இரண்டிரண்டாக ஆறு தடவை தொழுது விட்டுப் பின்பு வித்ரு தொழுதார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வித்ரின் எண்ணிக்கை இங்கே கூறப்படவில்லை. குறைந்த பட்ச வித்ரு ஒரு ரக்அத் என்று வைத்துக் கொண்டால் பதிமூன்று ரக்அத்கள் தொழுததாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தலைப்பில் வித்ரு ஒரு ரக்அத் என்றே கூறப்படுவதால் அதற்கேற்ப இதையும் புரிந்து கொள்வது நல்லது.

வித்ரையும் சேர்த்து 13 ரக்அத்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் நீள நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அதை விட நீளம் குறைந்த இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹைனீ (ரலி), நூல்: முஸ்லிம் 1284
நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 1138
இரண்டிரண்டாக ஆறு தடவையும் ஒரு ரக்அத் வித்ரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளனர். இவ்வாறு தொழுவதும் நபிவழி தான்.

5 ரக்அத் வித்ருடன் 13 ரக்அத்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஐந்தாவது ரக்அத்தில் தவிர உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1217
இரவுத் தொழுகை எட்டு ரக்அத்துடன் வித்ரு ஐந்து ரக்அத்கள் தொழலாம். ஐந்து ரக்அத் வித்ரு தொழுதால் முதல் நான்கு ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதுவதற்காக உட்காரக் கூடாது. கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார வேண்டும். இப்படித் தொழுவதும் நபிவழி தான்.

ஒரு ரக்அத் வித்ருடன் 11 ரக்அத்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்கள் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) , நூல்: முஸ்லிம் 1222
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1215


- பதில் : ரஸ்மின் MISc

நேர்மையில்லாத தங்க வியாபாரம்



தங்கத்தைக் கொடுத்த உடனே அதற்குப் பதிலாக வேறு தங்கத்தை மாற்றிக் கொள்வது தவறல்ல. தங்கத்தைக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து அதற்குப் பதிலாக வேறு தங்கத்தைப் பெறுவதையே மார்க்கம் தடைசெய்கின்றது.
நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன்.  தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் என்னை அழைத்தார்கள்.  அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள்.  பிறகுஃகாபாவிலிருந்து நமது கருவூலக் காப்பாளர் வரும் வரை சில்லறை தர முடியாது! என்றார்கள்.  இதை உமர் (ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது; ஏனெனில், நபி (ஸல்) அவர்கள்தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும்;உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும் ; உடனுக்குடன் மாற்றிக் கொண்டாலே தவிர! என்று கூறியுள்ளார்கள்என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : மாலிக் பின் அவ்ஸ் (ரலி) நூல் : புகாரி (2174)
பழைய தங்கத்துக்கு புதிய தங்கம் மாற்றுதல் குறித்தும் தங்க வியாவாரம் குறித்தும் மேலும் சில செய்திகளை நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை வியாபாரமேயாகும்.

தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும்.
ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு சேதாரம் என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.
இரண்டாவது மோசடி என்னவென்றால் கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்.
நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். 
ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
 
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஹராமாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.
சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.
ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான். ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.
இப்படி தங்க நகை வியாபாரத்தில் எந்த நேர்மையும் இல்லை. இறையச்சமும் இல்லை. ஹராம் ஹலால் பற்றி கடுகளவும் கவலை இல்லை. தங்க நகை வியாபாரிகள் அல்லாஹ்விடம் குற்றவளிகளாக நிற்கக் கூடாது என்பதற்காகவும் அவர்களின் வருமானம் ஹராமாக ஆகி அதனால் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் தகுதியை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் இதை நாம் சொல்லியாக வேண்டியுள்ளது. விளம்பரங்கள் நின்று விடும் என்று அஞ்சி அவர்கள் பாவிகளாவதை நாம் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
நன்றி:www.onlinepj.com